Sunday, June 16, 2024
Home » நியாயம் வென்றது

நியாயம் வென்றது

by kannappan

அதிமுக அரசால் பழி வாங்கப்பட்ட  மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு என்ற அறிவிப்பின் மூலம் 12 ஆயிரம் குடும்பங்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஊரகப் பகுதிகளில் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், கிராம பொதுச் சொத்துக்களைப் பேணிக் காத்திடல், சிறு சேமிப்புத் திட்டத்திற்கு உதவுதல் போன்ற கிராம அளவிலான பல்வேறு பணிகளுக்காக கலைஞர் முதல்வராக இருந்தபோது 2-9-1989-ல், ஒரு ஊராட்சிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என்ற அடிப்படையில், மொத்தம் 12 ஆயிரத்து 617 ஊராட்சிகளுக்கு 25 ஆயிரத்து 234 மக்கள் நலப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். ஆட்சி மாற்றம்  ஏற்பட்டு, ஜெயலலிதா தலைமையிலான அரசு பதவி ஏற்றதும் 13.07.1991-ல் இப்பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் 1996ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் வேலை தரப்பட்டது. அத்தோடு முடிந்ததா? என்றால் இல்லை. 2001ல் அதிமுக பதவிக்கு வந்ததும், மீண்டும் பணி பறிப்பு. 2006ல் கலைஞர் மீண்டும் முதல்வரானதும் ஊராட்சிக்கு ஒருவர் என 12 ஆயிரத்து 618 மக்கள் நலப் பணியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. மீண்டும் 2011ல் ஆட்சிக்கு வந்த  வேகத்தில் ஜெயலலிதா அவர்களை நடுத்தெருவில் நிறுத்தினார். பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் ஜெயலலிதா அரசு செவிசாய்க்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தின் கதவுகள் தட்டப்பட்டது. அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க நீதியரசர்கள் உத்தரவிட்டனர். ஆனால், நடந்ததோ அதிமுக ஆட்சி அல்லவா? உடனே உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கினார்கள். இந்த வழக்கு இன்னமும் விசாரணையில் உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்ததும், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தருவதற்கான பணிகள் அரசு மட்டத்தில் நடக்க துவங்கியது. கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதத்திலேயே பணியிழந்த  மக்கள் நலப் பணியாளர்களின் பெயர், முகவரி, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இப்போது, 12,524 பேருக்கு மீண்டும்  வேலை என்ற அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு, அவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க செய்துள்ளார். ‘மக்கள் நல பணியாளர்கள் விரும்பினால் அவர்களுக்கு கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பணி வழங்கப்படும்’ என அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த உத்தரவால் நியாயம் வென்றுள்ளது. மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் ஆட்சி என்பது மக்களாட்சிக்கான இலக்கணம். இந்த இலக்கணப்படி இன்றைக்கு இந்தியாவில் ஆட்சி நடத்துவது யார் என்றால் அது நம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, யார், யாருக்கு என்னென்னவற்றை, எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்த திட்டங்களை வகுத்து, ஆட்சிக்கு வந்ததும் அதை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். இன்னும் பல நல்ல அறிவிப்புகளை வெளியிடுவதோடு, பல புதிய திட்டங்களை முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை தமிழக மக்களுக்கு இருக்கிறது. …

You may also like

Leave a Comment

5 + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi