சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜு பேசுகையில், கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் கல்லூரி அமைக்க நில வகைப்பாடு பணிகள் முடிந்துள்ளது. பகுதி மக்கள் கோரிக்கை என்னவென்றால் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதுதான் பாக்கி. நாங்கள் நிச்சயதார்த்தம் செய்து விட்டோம். இந்த அரசு திருமணத்தை நல்லபடியாக செய்து தர வேண்டும்” என்றார். சபாநாயகர் அப்பாவு பேசுகையில், ‘‘பெண் பாத்திருக்காங்க” என்றார்.இதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘‘செவிலியர் கல்லூரி அமைப்பதற்காக உண்மையில் என்ன நடந்திருக்கிறது என்றால் நில மாற்றம் மட்டும்தான் நடந்திருக்கின்றது. மேய்க்கால் புறம்போக்கை நிலம் மாற்றம் மட்டும் தான் செய்திருக்கிறார்கள். இருந்தாலும் பரவாயில்லை. பெண் பார்க்கும் சூழ்நிலை மட்டும்தான் தொடங்கியிருக்கிறது. இருந்தாலும்கூட இந்த திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயம் நடத்தி வைக்கப்படும்” என்றார். நிச்சயதார்த்தம்-திருமணம் என அதிமுக எம்எல்ஏ- அமைச்சர் பேசியது பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது….