வேலூர், பிப்.22: வேலூர் கோட்டையை கட்டமைத்த நாயக்கர் காலத்து 400 ஆண்டுகள் பழமையான நாணயம் கிடைத்துள்ளது. வேலூரை சின்ன பொம்மி நாயக்கர், திம்ம நாயக்கர், லிங்கமா நாயக்கர் ஆகியோர் ஆட்சி செய்துள்ளனர். இவர்களது ஆட்சி காலத்தில் தான் அழியாத கற்கோட்டையான வேலூர் கோட்டையானது சின்ன பொம்மி நாயக்கர், திம்ம நாயக்கர்களால் கட்டப்பட்டது. இதில் லிங்கமா நாயக்கர் ஆட்சி செய்த காலமாக 1595-1604ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் நாணயம் ஒன்று வேலூர் நாணயம் சேகரிப்பாளரான தமிழ்வாணன் வாங்கியுள்ளார். இந்த நாணயத்தின் முன்பக்கத்தில் 5 கிளைகளை கொண்ட மரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் பின்புறத்தில் ளீங்கமராய என்று தேவநாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து வரலாற்று ஆர்வலரும், நாணயம் சேகரிப்பாளருமான தமிழ்வாணன் கூறுகையில், ‘நான் நாணயம் சேர்க்க தொடங்கியதில் இருந்து வேலூர் நாயக்கர்கள் காலத்து நாணயத்தை பல இடங்களில் தேடிக்கொண்டிருந்தேன். கடந்த 20 ஆண்டுகளாக வேலூர் நாயக்கர்கள் நாணயம் ஏதாவது கிடைக்குமா? என்று தேடிய நிலையில் சென்ற வாரம் சென்னையில் நடந்த நாணய கண்காட்சிக்கு சென்றேன். அங்கு லிங்கமா நாயக்கரின் நாணயம் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நாணயம் ஒன்றை விலை கொடுத்து வாங்கி வந்தேன். இதன் மூலம் நீண்ட நாள் கனவு நினைவாகி உள்ளது’ என்றார்.