Friday, May 3, 2024
Home » நாமக்கல் மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்வதை கண்காணிக்க ஆணையம் அமைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்வதை கண்காணிக்க ஆணையம் அமைப்பு

by Karthik Yash

நாமக்கல், ஜூன் 10: நாமக்கல் மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்வதை கண்காணிக்க துப்புரவு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மனிதர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் சாக்கடைகள் மற்றும் கசடு கழிவுநீர் தொட்டிகள் மேலாண்மை தொடர்பான அபாயகரமானவற்றை நீக்குதலை கண்காணிக்க, கலெக்டர் தலைமையில் துப்புரவு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் நகராட்சி ஆணையாளர்கள், தீயணைப்பு அலுவலர், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், தாட்கோ மேலாளர், சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் துப்புரவு ஆணையத்தின் தலைவரும், கலெக்டருமான உமா தலைமையில் நடந்தது. இதில், கசடு கழிவு நீர் அகற்றும் பணியில், மனிதர்கள் உள்ளே இறங்கி பணி மேற்கொள்வதை தடுக்கவும், இயந்திரங்கள் முலம் சுத்தம் செய்வதை அமல்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் உமா பேசியதாவது: கசடு மற்றும் கழிவு நீர் தொட்டிகள் சுத்தம் செய்யும் பணிக்கு, இயந்திரங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். மனிதர்கள் உள்ளே இறங்கி சுத்தம் செய்வது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. கசடு கழிவு நீர் அகற்றும் பணியாளர்கள், பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். பயிற்சி பெற்ற பணியாளர்களையே ஈடுபடுத்த வேண்டும். கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள், மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களை பயன்படுத்தக்கூடாது. இயந்திரங்கள் மூலமாக செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கழிவு நீர் அகற்றும் பணியில் அபாயம் ஏற்பட்டால், அவசர உதவிக்கு 24 மணி நேரமும் செயல்படும் உதவி எண் 14420 குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பணியில் முறைசாரா தொழிளார்கள் இருந்தால், அவர்களை கண்டுபிடித்து முறைபடுத்தி, இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டப்படி, மனிதர்களை கொண்டு கைகளால் கழிவுகளை அகற்றுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் மீறப்படும் குற்றங்களுக்கு, ஜாமீனில் வர அனுமதி கிடையாது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு நபரையும், அபாயகரமான முறையில் கழிவுநீர் அல்லது கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஈடுபடுத்தக் கூடாது. இதை முதல் முறையாக மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹2லட்சம் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். 2வது முறையாக மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹5 லட்சம் அபராதம் அல்லது இரண்டு சேர்த்து விதிக்கப்படும்.

கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்யும் பணியில், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கட்டாயப்படுத்தி, ஈடுபடுத்தி அதன் காரணமாக அப்பணியாளர்கள் இறக்க நேரிட்டால், சம்பந்தப்பட்ட நபர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கழிவு நீர் அகற்றும் உரிமையாளர்கள், பணியாளர்கள் பணியின் போது கையுறை, தலைக்கவசம், கண்கண்ணாடி, முகக்கவசம், முழு உடல் பிரதிபலிப்பு ஆடை, பாதுகாப்பு காலணிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். ஆறுகள், குளம், கழிவு நீர் வடிகால்கள் திறந்தவெளி இடங்கள், பாதாள சாக்கடை தொட்டி ஆகியவற்றில் கழிவு நீர் கொட்டக் கூடாது. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டுமே கொட்ட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். இந்த கூட்டத்தில், நகராட்சி ஆணையாளர்கள், துப்புரவு அலுவலர்கள், பொறியாளர்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், கழிவு நீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

twelve − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi