நாமக்கல், ஜூன் 11: நாமக்கல் நகராட்சியில் ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4ம் சனிக்கிழமைகளில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் நடந்து வருகிறது.
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் 2ம் ஆண்டு நேற்று துவங்கியது. இதையொட்டி பெருமளவில் துப்புரவு பணி மேற்கொள்ளுதல் என்ற தலைப்பின் கீழ், நாமக்கல் தினசரி சந்தை பகுதியில் தூய்மைப் பணிகள் நேற்று நடைபெற்றது. பணிகளை நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். மேலும், மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்தல், நீர்நிலைகள் சுத்தம் செய்தல் போன்ற பணிகளும் நடைபெற்றது.
கமலாலய குளக்கரை தூய்மை செய்யும் பணியில் நகராட்சி பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர். குளத்தில் உள்ள ஆகாயதாமரைகள் மற்றும் முட்புதர்கள் அகற்றப்பட்டது. தொடர்ந்து, சேந்தமங்கலம் ரோட்டில் மழை நீர் வடிகால் தூய்மை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், நகர்மன்ற உறுப்பினர்கள் சிவகுமார், சகுந்தலா பொறியாளர் சுகுமார், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார் பழனிச்சாமி, பாஸ்கர், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.