புதுடெல்லி: டிவிட்டரில் குறிப்பிட்ட சில அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு வழங்கப்பட்ட லேபிள் திடீரென மறைந்தது. ‘இதை நான்தான் கொன்றேன்’ என்று மஸ்க் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கியது முதல், தினமும் ஏதாவது ஒரு மாற்றத்தை செய்து வருகிறார். அதன்படி, டிவிட்டரில் சமீபத்தில் வெளியான புதுப்பிப்பு கொள்கையின்படி, குறிப்பிட்ட சில சரிப்பார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு ‘அதிகாரப்பூர்வமானவை’ என்பதை குறிப்பிடும் வகையில் புதிய முத்திரை (லேபிள்) வழங்கப்பட்டது. அதன்படி, தற்போது பிரதமர் மோடியின் கணக்கு உட்பட, தேர்ந்தெடுக்கப்பட்ட டிவிட்டர் கணக்குகளில் இந்த லேபிள் இடம் பெறுகிறது. அதே நேரம், இந்த லேபிள் அளிக்கப்பட்ட சில மணி நேரத்துக்குள் ஏராளமானோருக்கு அது திடீரென மாயமானது. இதனால், குழப்பம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் பிரபல யூடியூபர் மார்க்யூஸ் பிரவுன்லீ, தனது கணக்கின் லேபிள் மறைந்து விட்டதாக டிவிட் செய்திருந்தார். அதற்கு எலான் மஸ்க், ‘நான்தான் அதை கொன்றேன். அதிகாரப்பூர்வ கணக்கு சரிபார்ப்பு, பெரியளவில் இருக்கும்’ என்று பதில் அளித்துள்ளார். …