கூடுவாஞ்சேரி, ஜன.28: நண்பர்களுடன் பழகாதே என தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஊரப்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.நகர், சுபாஷ் சந்திரபோஸ் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (46). இவர் கிண்டியில் கார் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவருக்கு கவிதா (37) என்ற மனைவியும், சாய்ராம் (18), லட்சுமிநாராயணன் (15) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் சாய்ராம் ஐடிஐ முடித்துள்ளார்.
2வது மகன் லட்சுமிநாராயணன் அப்பகுதியில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இதில் சாய்ராம் வேலைக்குச் செல்லாமல் தனது நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தவறான நண்பர்களுடன் பழகாதே என்று கூறி தாய் கவிதா சாய்ராமை நேற்று காலை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கவிதா அருகில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்துக்கு குடிநீர் நிரப்ப சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சாய்ராம் பெட் ரூமுக்குச் சென்று கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார்.
பின்னர் மின்விசிறியில் தனது தாயின் புடவையால் தனக்குத்தானே தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து வீட்டுக்கு வந்த கவிதா, பெட் ரூமுக்குச் சென்று கதவை தட்டியுள்ளார். இதில் வெகு நேரமாக சாய்ராம் கதவை திறக்காததால், சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மகன் தூக்கில் சடலமாக தொக்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி காவல்நிலைய எஸ்ஐ சுகன்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் சாய்ராமின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாய்ராமின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்துக்கு திரண்டு வந்து அங்கு தனியார் ஆம்புலன்ஸில் வைக்கப்பட்டிருந்த சாய்ராமின் சடலத்தைப் பார்த்து கதறி அழுதனர்.