Saturday, May 11, 2024
Home » நடைபயிற்சி செய்தவரிடம் இளம்பெண்ணுடன் வந்து செயின் பறித்த வாலிபர்: சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

நடைபயிற்சி செய்தவரிடம் இளம்பெண்ணுடன் வந்து செயின் பறித்த வாலிபர்: சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

by Karthik Yash

வேளச்சேரி, பிப்.6: இளம்பெண்ணுடன் மொபட்டில் வந்த வாலிபர், நடைபயிற்சி செய்த பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் அடையாறில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடையாறு, கஸ்தூரிபா நகர், 3வது தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபாலன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வசந்தா ராணி (64). இவர் வழக்கம்போல் நேற்று காலை 7.10 மணிக்கு கஸ்தூரிபா நகர் பூங்கா அருகே நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மொபட் ஓட்டிவர, முகத்தில் கர்ச்சிப் கட்டிக்கொண்டு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பின்னால் அமர்ந்து வந்துள்ளார். அந்த இளம்பெண் மொபட்டை சாலையோரம் நிறுத்திய நிலையில், பின்னால் உட்கார்ந்து இருந்த வாலிபர் கீழே இறங்கி, நடைபயிற்சி செய்த வசந்தா ராணி அருகே சென்று, திடீரென கழுத்தில் கிடந்த ஐந்தரை சவரன் தாலிச் செயினை பிடித்து இழுதுள்ளார்.

இதில் தடுமாறி கீழே விழுந்த வசந்தா ராணிக்கு கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. அப்போது தாலிச் செயினும் அறுந்தது. இதையடுத்து அந்த வாலிபர் தாலிச் செயினுடன் ஓடி, தயாராக நின்ற அந்த இளம்பெண்ணின் மொபட்டில் ஏறி உட்கார்ந்தார். பின்னர் அந்த பெண் மொபட்டை ராஜிவ்காந்தி சாலை வழியாக டைடல் பார்க் நோக்கி ஓட்டி சென்றுவிட்டார். மொபட்டில் வந்த இருவரும் ஹெல்மெட் அணியாமல் வந்துள்ளனர். இதுகுறித்து அடையாறு காவல் நிலையத்தில் வசந்தா ராணி புகார் கொடுத்தார். அதன்பேரில், குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, செயின் பறித்து தப்பிய இளம்பெண் மற்றும் வாலிபரை, சிசிடிவி காட்சிகள் மூலம் தேடி வருகின்றனர். இளம்பெண்ணுடன் மொபட்டில் வந்த வாலிபர், செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

You may also like

Leave a Comment

4 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi