சென்னை:நடிகை கௌதமி மூலதன ஆதாய வரியில் 25 சதவீதத்தை செலுத்தும் பட்சத்தில், அவரது 6 வங்கி கணக்குகளின் முடக்கத்தை நீக்கும்படி வருமான வரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் நடிகை கௌதமி தாக்கல் செய்த மனுவில், பெரும்புதூர் அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை கடந்த 2016ம் ஆண்டு 4 கோடியே 10 லட்ச ரூபாய் விற்றேன். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ெடல்லியில் உள்ள தேசிய வருமான வரி மதிப்பீட்டு மையம், விவசாய நிலத்தின் வருவாய் 11 கோடியே 17 லட்சம் என மதிப்பீட்டு உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில், எனது ஆறு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இதனால் எனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வங்கி கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டாபாணி, மூலதன ஆதாய வரியில் 25 சதவீதம் செலுத்திய பிறகு நடிகை கௌதமியின் முடக்கப்பட்ட கணக்குகளை வருமான வரித் துறை விடுவிக்க வேண்டும். நான்கு வாரங்களுக்குள் மீதி கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், மதிப்பீட்டு உத்தரவின் செயல்பாடுகளை வருமானவரித்துறை நிறுத்திவைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்….