மதுரை, மார்ச் 24: மதுரை மாவட்டத்தில் உள்ள சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் எடைகளில் மோசடி நடைபெறுவதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது ஏராளமான தற்காலிக கடைகள் சாலைகளின் ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த கடைகளில், விற்பனை செய்யப்படும் பொருட்களின் எடை சரியான அளவில் இருப்பதில்லை என்று வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இங்கு எடைக்கற்கள் முறையாக முத்திரையிடப்படாத நிலையில், கொள்முதல் செய்யும் பொருட்களின் அளவில் பெரிய அளவில் மாற்றம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
எனவே, இப்பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோர தள்ளுவண்டிகள் மற்றும் கடைகளில் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் பயன்படுத்தும் தராசுகள் சரியான எடையளவினை காட்டுகிறதா என்பதுடன் விற்பனையாகும் பொருட்களின் விலைகளையும் கண்காணிக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.