நாங்குநேரி: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மயிலாப்பூர் நம்பியாற்றில் நேற்று முன்தினம் பெண் சடலம் மிதப்பதாக கிராம மக்கள் நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆற்றில் மிதந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அதே ஊரைச் சேர்ந்த சுடலை கண்ணு (36) என்பவரின் மனைவி ஈஸ்வரி (35) என்பது தெரிய வந்தது.இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஈஸ்வரியின் கழுத்து பகுதியில் காயம் இருப்பதால், அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரது கணவர் சுடலைக்கண்ணுவிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கணவர் கொலை செய்து இருப்பது அம்பலமானது. இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது:வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். தினமும் கூலி வேலைக்கு சென்று வந்த எனக்கு போதிய வருமானம் இல்லாததால் கடந்த ஓராண்டுக்கு மேலாக மதுரையில் அழைப்பு ஓட்டுனராக பணியாற்றி வந்தேன். அங்கு ஈஸ்வரியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் சுடலைக்கண்ணு அவரிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் கடந்த மாதம் அங்கிருந்து குடும்பத்துடன் நாங்குநேரி அருகே உள்ள துலுக்கர்ப்பட்டியில் ஈஸ்வரியின் தாய் சண்முகத்தாயின் வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார்கள்.இந்நிலையில் கடந்த 16ம் தேதி மயிலாப்பூரில் உள்ள தேவாலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது, சுடலைக்கண்ணுக்கும், மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர் ஈஸ்வரியை கழுத்தை நெரித்து கொலை செய்து ஆற்றில் வீசி விட்டுச் சென்றுள்ளார். இதை அவர் வாக்குமூலமாகவும் கொடுத்துள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர். பின்னர் போலீசார் சுடலைக்கண்ணுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். …