ஈரோடு, ஜன.30: ஈரோட்டில் கட்டிட தொழிலாளியின் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.2 லட்சம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு வைராபாளையம் செங்கோட்டையன் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (56). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராதா (50). இவர்களுக்கு ஒரு மகன், திருமணமான மகள் உள்ளனர். ஆறுமுகம் கடந்த 20ம் தேதி உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றார். பின்னர் 21ம் தேதி இரவு வீடு திரும்பினர். ராதா வீட்டு பீரோவை திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை காணவில்லை.
ஆனால், பீரோவில் இருந்த 5 பவுன் நகை மட்டும் இருந்தது. தகவல் அறிந்த கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும், தடயவியல் நிபுணர்கள் ஆறுமுகத்தின் வீட்டில் பதிவான நபர்களின் கைரேகைகளை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், ஆறுமுகத்திடம் கட்டிட வேலை செய்யும் ஈரோடு கருங்கல்பாளையம் செங்கோட்டையன் வீதியை சேர்ந்த அர்த்தநாரி மகன் பூபதி (33) என்பவர் பணத்தை திருடியது உறுதியானது. இதைத்தொடர்ந்து, பூபதியை நேற்று முன்தினம் கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.68 ஆயிரம் ரொக்கத்தை மீட்டனர். இதையடுத்து பூபதியை நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.