விழுப்புரம், டிச. 28: திருவெண்ணெய்நல்லூர் அருகே முன்விரோத தகராறில் கூலித்தொழிலாளியை கொலை செய்த மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏமப்பூரை சேர்ந்த ஒரு தரப்பினருக்கும், காந்திபுரம் காலனியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இருசக்கர வாகனத்தில் முந்தி செல்வதில் ஏற்பட்ட பிரச்னையால் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 2014 ஜனவரி 16ம் தேதி காந்திக்குப்பம் காலனியை சேர்ந்த ஏழுமலை என்பவரை ஏமப்பூரைச் சேர்ந்த அரசு(எ) ஜோதி(38). விஜி(எ) விஜயகுமார்(33), மூர்த்தி(எ) விநாயகமூர்த்தி(32) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கல் மற்றும் கட்டையால் தாக்கி கொலை செய்தனர்.
இதுகுறித்து அவரது உறவினர் ஐயப்பன் அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய போலீசார் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து அரசு உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் எஸ்சி, எஸ்டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி பாக்கியஜோதி நேற்று தீர்ப்பளித்து உத்தரவிட்டார். அதில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். தொடர்ந்து சிறைதண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.