கிருஷ்ணகிரி, பிப்.28: கிருஷ்ணகிரியில் முந்திச் சென்று பெட்ரோல் போட்டதை தட்டிக்கேட்ட தொலாளி சரமாரி தாக்கப்பட்டார். இதுதொடர்பாக 2பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி பழையபேட்ைட கொத்தபேட்டா பகுதியைச் சேர்ந்தவர் சேகர். கூலி தொழிலாளி. இவர் பழையபேட்டை டிபி லிங்க் ரோட்டில் உள்ள பங்கில் பெட்ரோல் போடுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர், வரிசையில் நிற்காமல் முந்திச் சென்று பெட்ரோல் போட முயன்றுள்ளார். அதனை சேகர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த வாலிபர், சேகரிடம் தகராறில் ஈடுபட்டதோடு அவரை சரமாரி தாக்கினார்.
மேலும், அந்த வாலிபருடன் வந்த 2 பேரும் சேகரை தாக்கினர். தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் படுகாயமடைந்த சேகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரை தாக்கிய, கிட்டம்பட்டி அம்மன் நகரை சேர்ந்த நிதிஷ் கண்ணன்(23), ராசுவீதியை சேர்ந்த அரசு(20) ஆகிய 2பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜோதி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த குரு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.