பெரம்பூர்: வியாசர்பாடியில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட 2 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 49வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் ராஜ் (எ) கருப்பு அஜித் (28). இவர் மீது வியாசர்பாடி, எம்கேபி நகர், ஓட்டேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதேபோன்று, வியாசர்பாடி எம்ஜிஆர் நகர் 6வது தெருவை சேர்ந்தவர் சங்கர் (21). இவர் மீது எம்கேபி நகர், வியாசர்பாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. தொடர்ந்து, 2 பேரும் வியாசர்பாடி, எம்கேபி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் 7ம்தேதி வியாசர்பாடி பகுதியில் தியாகராஜன் (40) என்ற நபரை, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.மேலும், தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வரும் இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்திருந்தார். அதனை ஏற்று தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் பிரவீன் ராஜ் (எ) கருப்பு அஜித், சங்கர் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதனையடுத்து, தற்போது சிறையில் இருக்கும் 2 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது….