புதுடெல்லி: நாடு முழுவதும் தொடர்ந்து 19வது நாளாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 68 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்த பாதிப்பு 1 கோடியே 20 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமெடுத்துள்ளது. கடந்த 19 நாளாக தொடர்ந்து தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. அதில், ஒரே நாளில் 68,020 பேர் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பில் மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், கேரளா, தமிழ்நாடு, சட்டீஸ்கர் ஆகிய 8 மாநிலங்கள் 84.5 சதவீதத்தை கொண்டுள்ளன. கடந்த அக்டோபர் 11ம் தேதி தினசரி பாதிப்பு 74,383 ஆக இருந்தது. அதன் பிறகு தற்போது 68 ஆயிரத்தை தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. மொத்த பாதிப்பு 1 கோடியே 20 லட்சத்து 39,644 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 291 பேர் பலியாகி உள்ளனர். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 61,843 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து 5 லட்சத்தை தாண்டி உள்ளது. மொத்தம் 5 லட்சத்து 21,808 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கையும் விரைவுபடுத்தபட்டு வருகிறது. இதுவரை 6 கோடியே 5 லட்சத்து 30,435 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.* விலங்கிடம் இருந்தே கொரோனா பரவியதுசீனாவில் இருந்து உதயமான கொரோனா வைரஸ் அந்நாட்டின் வைரஸ் ஆய்வகத்தில் இருந்து கசிந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. எனவே, கொரோனா தோன்றியது குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு சமீபத்தில் சீனா சென்றது. அங்கு ஆய்வகங்கள், கடல் உணவு சந்தை, இறைச்சி சந்தைகளில் ஆய்வு நடத்தியது. இதன் அறிக்கை முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த அறிக்கையில், பிற விலங்குகள் மூலமாக வவ்வாலிடமிருந்து மனிதனுக்கு பரவியிருக்கிறது என கூறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு சீன ஆய்வகத்திற்கும் வைரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், இந்த அறிக்கை வெளியிடுவதில் உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து தாமதித்து வருவதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணியில் சீனாவின் சதி இருக்கலாம் என்றும் கருத்துகள் கூறப்படுகின்றன….