திருவாரூர், பிப். 10: தை அமாவாசையை முன்னிட்டு திருவாரூர் கமலாலய குளத்தில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கினர். சாதாரணமாக மாதம் ஒருமுறை வரும் அமாவாசை தினத்தில் தங்களது முன்னோர்களுக்கு அவரது வாரிசுகள் தர்ப்பணம் வழங்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் தை மாதம் மற்றும் ஆடி மாதம் அமாவாசை தினங்கள் விசேஷமானவை என்பதால் இந்த தினங்களில் தங்களது முன்னோர்களுக்கு ஏராளமானோர் புனித நீராடி தர்ப்பணம் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.
அதன்படி நேற்று தை அமாவாசையையொட்டி திருவாரூர் கமலாலய குளத்தில் ஏராளமானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கினர். இதேபோல் திருப்பள்ளி முக்கூடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கினர்.