கடும் பொருளாதார வீழ்ச்சியால், பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது அண்டை நாடான இலங்கை. விலைவாசி உயர்வு, அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நாணய மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. சர்வதேச செலாவணி நிதியத்திடம் கடன் பெறுவதற்கான முயற்சி ஒருபுறம் நடந்தாலும், மறுபுறம் அமெரிக்க டாலர்களில் நடக்கும் இறக்குமதி முடங்கியுள்ளது. இறக்குமதியை நம்பியிருக்கும் தொழில்துறைகள் திணறுகின்றன. இத்தகைய சூழலில் கடன்தொகையை, திருப்பிச்செலுத்த இயலாது என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இது, மேலும் பல சிக்கல்களுக்கு வழி வகுத்துள்ளது. கடந்த 1960ம் ஆண்டுக்கு பிறகு 140க்கும் மேற்பட்ட நாடுகள் கடன் தவணைகளை திருப்பிச்செலுத்த தவறியிருக்கின்றன. அர்ஜென்டினா, லெபனான், ஈக்வடார், ஜாம்பியா ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் இணைந்துள்ளன. இலங்கைக்கு இப்போது 51 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் இருக்கிறது. இதில், சுமார் 35 பில்லியன் டாலர்கள் வரை கடன்களை திருப்பிச்செலுத்துவதை தள்ளிவைத்திருக்கிறது. இருப்பினும், இந்த ஆண்டிலேயே சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர் கடன்களை இலங்கை திருப்பிச்செலுத்த வேண்டியிருக்கிறது.ஆனால், இலங்கையிடம் இப்போது 1.93 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளது. கடன்களுக்கான கெடு காலாவதியாவதை தவிர்க்கவே, இலங்கையின் மத்திய வங்கி தலைவர் ‘திவால்’ அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இலங்கையில் ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டே செல்கிறது. கடன்களை திருப்பிச் செலுத்தாதபோது ‘கடன் தர மதிப்பீடு’ வழங்கும் அமைப்புகள் இலங்கையின் தரமதிப்பை குறைக்கும். இதனால், புதிய கடன்கள் வாங்குவது பாதிக்கப்படும். அத்துடன், கூடுதல் வட்டி செலுத்தநேரிடும். நாட்டுக்குள் புதிய முதலீடு வருவது பாதிக்கப்படும். ஏற்கனவே இருக்கும் முதலீட்டாளர்கள் வெளியேறவும் வாய்ப்பு உண்டு. இலங்கைக்கு, வெளி உதவிகள் எதுவும் வராது. வங்கித்துறை திவால் அடையலாம். நாட்டின் பொருளாதாரம் முழுமையாக ஸ்தம்பித்து, நாடு பொருளாதார மந்த நிலைக்கு செல்லலாம். இந்நிலை உருவானால், நாடு வேறொரு நாணயத்தை ஏற்றுக்கொள்ளும் சூழல் ஏற்படும். அப்படி ஏற்கும்போது, இன்னொரு நாட்டிற்கு அடிமைப்பட நேரிடும். கடன் வழங்கும் நாடுகள், பல்வேறு நிபந்தனைகளை விதிக்க நேரிடும். அப்போது, இலங்கை இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும். இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரம் முற்றிலும் வீழ்ந்து, மீளவே முடியாத நிலை ஏற்படும். தற்போதைய சூழ்நிலையில், இலங்கைக்கு, இந்தியா, சீனா, ஜப்பான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் கடன் வழங்குகின்றன. கடன் கொடுத்த நாடுகளின் ஆதிக்கம் தலைதூக்கும் முன்பாக இலங்கை விழித்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, அண்டை நாடான இந்தியா ரொம்பவே உஷாராக இருக்கவேண்டும். நமது நாட்டின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் தலைதூக்காத வகையில், அரசியல் சாணக்கியத்தனத்தை வெளிப்படுத்த வேண்டும். இதுவே, இந்தியாவுக்கு பாதுகாப்பு….