சிவகங்கை, ஏப்.15: தமிழகம் முழுவதும் வருகிற ஏப்.19ல் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் 16ல் வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. முதல் சில நாள்கள் வாகன பரிசோதனை உள்ளிட்ட நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்பட வில்லை. சுவர் விளம்பரம் அழிப்பது, கொடிக்கம்பங்கள் அகற்றுவது, போஸ்டர்களை அகற்றுவது உள்ளிட்டவைகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.
கட்சியினர் மற்றும் தனியார் எழுதிய சுவர் விளம்பரங்களை அவர்கள் அழிக்க வில்லை எனில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு சார்பில் அழித்து அதற்கான பணத்தை எழுதியவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு கட்சியினரும் தங்களின் சுவர் விளம்பரங்களை அழித்தனர். கொடிக்கம்பங்களை பாதுகாப்பாக கொண்டு சென்றனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 பறக்கும் படைக்குழு, 3 நிலையான கண்காணிப்புக் குழு, 4 வீடியோ மதிப்பீட்டுக்குழு, ஒரு வீடியோ பார்வையிடும் குழு என மொத்தம் 36குழுக்கள் 24மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 20வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை உள்ளிட்ட நாள்கு சட்டமன்ற தொகுதிகளிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகளை மீறி தனியார் சிலர் தங்களது வீட்டு நிகழ்ச்சிகளுக்கு பிளக்ஸ் வைத்தது, கூடுதல் வாகனங்களில் பிரசாரம், சாலையை மறித்து பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விதிமுறை மீறல்கள் செய்ததாக அரசியல் கட்சிகள், அமைப்புகள் மீது இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.