நாகப்பட்டினம், ஏப்.18: வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கு வாகனங்களை பயன்படுத்தும் வேட்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் ஜானிடாம்வர்கீஸ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நாளை(19ம் தேதி) காலை 7 மணி முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு பிரசாரம் நேற்று
மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது.
இதனால் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரையின் படி வாக்காளர்களை வாக்குச் சாவடிகளுக்கு அழைத்து வரவும், வாக்குச்சாவடிகளிலிருந்து அழைத்து செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு வேட்பாளருக்கு அனுமதி இல்லை. அவ்வாறு வாகனத்தை பயன்படுத்தினால் 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 133ம் பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் தற்காலிக பிரச்சார அலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டர்கள் தொலைவில் மட்டுமே அமைக்க வேண்டும்.
தேவையில்லாத கூட்டத்தை கூட்ட அனுமதி இல்லை. இந்த சட்டங்கள் அனைத்து நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதராண்யம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதியிலும் அமல்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.