தேனி, ஜன. 13:தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 19ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடத்தப்பட உள்ளது. தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைகள் சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைகளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
மேலும், தங்களது கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் மனுக்களாகவும் வழங்கலாம். விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்கள், தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி, அதன்மீது தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், இக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.