Sunday, June 16, 2024
Home » தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் 200 கோடி மோசடி விவகாரத்தை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் 200 கோடி மோசடி விவகாரத்தை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

by kannappan

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்க பணிக்காக பீமன்தாங்கல் என்ற கிராமத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்தது. அப்போது, அந்த கிராமத்தில் சாலை பணிக்காக எடுக்கப்பட்ட நிலங்களுக்கு, இழப்பீடாக 200 கோடி முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. நிலத்தின் உரிமையாளர்கள் பலர் அரசின் அனாதீனம், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை பொய்யான ஆவணங்கள் சமர்ப்பித்து, பட்டா மாற்றி, முறைகேடாக இழப்பீடு தொகையை பெற்றுள்ளனர் என தெரியவந்தது. இதையடுத்து, இந்த மோசடி குறித்து பாதிக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளரான நவகோடி நாராயணன் என்பவர், தமிழ்நாடு அரசின் நில நிர்வாக ஆணையருக்கு புகார் அளித்தார். இந்த புகார், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விவகாரம் என்பதால், இந்த புகார் மனு சிபிஐ விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, சிபிஐ விசாரித்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில், 200 கோடி இழப்பீடு வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது. இதில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கான நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த நர்மதா உள்பட 5 அலுவலர்கள் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள், மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் வெங்கடேசன் அளித்த புகாரின்படி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நவகோடி நாராயணனிடம் 2வது முறையாக நேற்று விசாரணை நடத்தினர். அப்போது அவர், தனது தரப்பு ஆதாரங்களையும், ஆவணங்களையும் வழங்கியுள்ளார். இதுதொடர்பாக நில அபகரிப்பு பிரிவு போலீசாரும் விசாரித்து வருவதால், வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது….

You may also like

Leave a Comment

three × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi