திருச்சி: குஜராத்தில் தேசிய அளவிலான தடகள போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று ஊர் திரும்பிய திருச்சி வீரருக்கு ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தேசிய அளவில் மாவட்டங்களுக்கு இடையேயான இளையோருக்கான தடகளப் போட்டி-2024 (நிட்ஜாம்) கடந்த 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் இருந்து 13 வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு கலந்து கொண்டனர். இந்த தடகள போட்டியில் இந்தியா முழுவதும் உள்ள சுமார் 600 மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சாம்பியன்ஷிப்பில் தடை தாண்டுதல், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், டிரையத்லான், ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டுகள் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் பெண்டாத்தளன் எனும் போட்டியில் கலந்து கொண்ட திருச்சி விளையாட்டு விடுதியை சேர்ந்த மாணவர் அகத்தியன் சிறப்பாக செயல்பட்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். பதக்கம் வென்ற வீரர்கள் நேற்று ரயில் மூலம் திருச்சி ஜங்ஷன் வந்தனர். அப்போது ரயில் நிலையத்தில் வீரர் அகத்தியனுக்கு திருச்சி மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக துணை செயலாளர் கனகராஜ், சீனியர் சுரேஷ்பாபு, தம்பிராஜ், ஆரோக்கியராஜ், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வரவேற்று சிறப்பித்தனர்.