கோவை: கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேலக்காரவை சேர்ந்தவர் சஜீவ் கருண் (32). இவர் பொள்ளாச்சி கோட்டாம்பட்டியில் தனியார் நிறுவனத்தை துவங்கினார். சஜீவ் கருண் தேங்காய் எண்ணை உற்பத்தி செய்யும் ஆலையை நடத்தி வருவதாகவும், தனது நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடு செய்தால், லாபத்தில் பங்கு தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த பரமசிவம் என்பவர் இவரின் நிறுவனத்தில் ரூ.96 லட்சம் முதலீடு செய்தார். ஆனால், லாபத்தில் பங்கு கொடுக்கவில்லை என்றும், பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.இதையடுத்து, அவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் சஜீவ் கருண், கோவை மாவட்டத்தில் 300 பேரிடம் ரூ.110 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை அமைத்து போலீசார் கேரளா மாநிலம் திருச்சூரில் பதுங்கியிருந்த சஜீவ் கருணை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கேரளாவில் 85 மோசடி வழக்குகள் பதிவாகியிருப்பதும் தெரியவந்தது. மோசடி செய்த பணத்தில் கேரளாவில் பங்களா, எஸ்டேட், சொகுசு கார்கள் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். மோசடி பணத்தில் பல குறும்படங்களை எடுத்துள்ளார். பல மாடல் அழகிகளுடன் உல்லாசமாகவும் இருந்துள்ளார் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ‘‘என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும், நான் மீண்டும் வெளியே வந்து மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் சம்பாதிப்பேன்’’ என அவர் கூறுகிறாராம். …