தென்காசி : தென்காசி மாவட்டத்தில் பள்ளி செல்லா, இடைநின்ற, மாற்றுத் திறனாளி மற்றும் கோவிட்- 19 பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்டறிந்து கணக்கெடுக்கும் பணி வரும் 31ம்தேதி வரை நடைபெறுவதாக கலெக்டர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் 2021-22ம் கல்வியாண்டிற்கு 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பள்ளி செல்லா, இடைநின்ற, மாற்றுத் திறனாளி மற்றும் கோவிட்- 19 பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் வயதுக்கேற்ற வகுப்பில் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள பள்ளியில் சேர்ப்பதற்கான கணக்கெடுப்பு பணி வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.சிறப்பு பயிற்சி தேவைப்படும் மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி மையம் மூலம் சிறப்பு பயிற்சி அளித்து ஏப்ரல் முதல் வாரத்தில் நிரந்தர பள்ளிகளில் மீண்டும் சேர்க்கப்படுவர். மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு, அவர்களின் இயலாமையை பொறுத்து பள்ளி மற்றும் பள்ளி ஆயத்தப் பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டு சிறப்பு ஆசிரியர்கள் மூலம் பயிற்சி வழங்கப்படும். பள்ளிக்கு வர இயலாத மாணவர்களுக்கு இல்லம் சார்ந்த கல்வி என்கிற அடிப்படையில் அவர்களின் வீடுகளுக்கே சென்று சிறப்பு ஆசிரியர்கள் மூலம் பயிற்சி தரப்படும்.பொதுமக்கள் தங்கள் பகுதியில் 6 முதல் 19 வயது வரையிலான பள்ளி செல்லா அல்லது இடைநின்ற குழந்தைகள் இருப்பது தெரிய வந்தால், அதுபற்றி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக கைபேசி 98422 67069 என்கிற எண்ணை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்….