விருதுநகர், அக்.9: தூய ஜெபமாலை அன்னை ஆலய தேர்ப்பவனி நடைபெற்றது. விருதுநகர் ஆற்றுப்பாலம் அருகில் உள்ள கத்தோலிக்க ஆலயமான தூய ஜெபமாலை அன்னை ஆலயத்தின் 6ம் ஆண்டு திருவிழா கடந்த செப்.29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு 9ம் நாள் திருவிழா மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் திருப்பலி நடைபெற்றது. அதன்பின் மிக்கேல் அதிதூதர், புனித அந்தோணியார், தூய ஜெபமாலை அன்னையின் திருவுருவம் தாங்கிய அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் பவனி நடைபெற்றது.
ஆலயத்தில் இருந்து புறப்பட்டு சிவகாசி ரோடு, ஆனைக்குழாய், டி.டி.கே ரோடு வழியாக ஆலயம் வந்தடைந்தது. இதில் விருதுநகர் டவுன், நிறைவாழ்வு நகர், பாத்திமாநகர், பாண்டியன்நகர், சூலக்கரை,கவலூர், பர்மாகாலனி, மூளிப்பட்டி, வெள்ளூர் பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை நிறைவாழ்வு நகர் பங்குத்தந்தை அந்தோணிசாமி தலைமையில் திருச்சிலுவை சகோதரிகள், பங்கு இறை மக்கள் செய்திருந்தனர்.