தூத்துக்குடி,டிச.24: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சமூக பொறுப்பு நிதியின் (சிஎஸ்ஆர்) கீழ் வெள்ள நிவாரண முகாம்களை நடத்தியது. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியை துவக்கி வைத்தார். வெள்ள நிவாரண முகாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கி சார்பில் உணவுப்பொட்டலங்கள், குடிநீர், பால், மளிகைப்பொருட்கள், படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகள் வழங்கப்பட்டன.
இந்த முகாம்களின் மூலமாக சுமார் 6000 நபர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் மாதாநகர், மாநகராட்சி அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகள், சோட்டையன்தோப்பு, முத்தம்மாள்காலனி, ஜோதிபாசுநகர், மாப்பிள்ளையூரணி ஆகிய பகுதிகளில் வெள்ள நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இதேபோல் நெல்லை மாவட்டத்தில் சீவலப்பேரி மற்றும் கீழநத்தம் கிராமம், பற்பநாதபுரம் கிராமம், மேலவீரராகவபுரம், சிஎன் கிராமம் ஆகிய பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.