ஆத்தூர், பிப்.5: ஆத்தூர் துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீப்பொறி விழுந்து புற்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நரசிங்கபுரம் பாரதிபுரம் பகுதியில் ஆத்தூர் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் வெயில் சுட்டெரித்து வருவதால், மின் நிலைய வளாகத்தில் புற்கள் காய்ந்து போய் காணப்படுகிறது.
இந்நிலையில், நேற்று டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீப்பொறி விழுந்து, காய்ந்த புற்கள் கொளுந்து விட்டு எரிந்தது. அப்போது, காற்று பலமாக வீசியதால் தீ வேகமாக பரவியது. உடனடியாக ஊழியர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால், பெருத்த சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து துணை மின் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.