சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி மாநிலம் முழுவதும் 6,563 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்களை தடுக்க 6,673 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுவார்கள் என தீயணைப்புத்துறை டிஜிபி பி.கே.ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம் குறித்து சென்னை தி.நகரில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இந்த பேரணியை தீயணைப்புத்துறை டிஜிபி பி.கே.ரவி தொடங்கி வைத்தார். பின்னர் தீயணைப்புத்துறை டிஜிபி பி.கே.ரவி நிருபர்களிடம் கூறியதாவது: தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் 1,610 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளோம். இதுதவிர பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மார்க்கெட், பேருந்து நிலையங்கள் என மாநிலம் முழுவதும் 1,120 இடங்களில் விழிப்புணர்வு நடத்தியுள்ளோம். சென்னையை பொருத்தமட்டில் 861 பட்டாசு கடைகளுக்கு தீயணைப்பு துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 6,563 பட்டாசு கடைகளுக்கு இதுவரை நாங்கள் அனுமதி வழங்கியுள்ளோம். தீபாவளி அன்று மாநிலம் முழுதும் உள்ள 352 தீயணைப்பு நிலையங்களிலும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கான அனைத்து உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் தீயணைப்பு அதிகாரிகள் உட்பட 6,673 வீரர்கள் பணியில் ஈடுபடுவார்கள். சென்னை மக்கள் அதிக நெருக்கமாக வாழக்கூடிய நகரம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளி மாவட்டங்களில் இருந்து 23 தீயணைப்பு வண்டிகள் வரவழைத்துள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்….