Tuesday, May 7, 2024
Home » (தி.மலை) காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை சப்- கலெக்டர் விசாரணை இன்று பிறந்தநாள் கொண்டாடுவதில் தகராறு

(தி.மலை) காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை சப்- கலெக்டர் விசாரணை இன்று பிறந்தநாள் கொண்டாடுவதில் தகராறு

by Karthik Yash

செய்யாறு, மே 18: செய்யாறில் காதல் திருமணம் செய்த இளம்பெண், இன்று பிறந்தநாள் கொண்டாடுவது தொடர்பாக ஏற்பட்ட குடும்ப தகராறில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து சப்- கலெக்டர் ஆர்.அனாமிகா விசாரணை நடத்தி வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, பெரணமல்லூர் பூத்தான் குட்டை தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார்(35). செய்யாறில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி(30). இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணமானது முதல் புவனேஸ்வரிக்கும், அவரது மாமியாருக்கும் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னை வருமாம். இந்நிலையில், கடந்த 1ம் தேதி செய்யாறு அடுத்த கீழ்புதுப்பாக்கம் விரிவு பசும்பொன் நகரில் வாடகை வீட்டில் கணவன், மனைவி இருவரும் வசித்து வந்தனர்.

இன்று (18ம் தேதி) புவனேஸ்வரிக்கு பிறந்த நாளாம்.
இதனை கொண்டாடுவது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு பிரவீன்குமாரும், புவனேஸ்வரியும் பேசியுள்ளனர். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட சிறு தகராறு காரணமாக புவனேஸ்வரி தனியாக அறையிலும், பிரவீன்குமார் கூடத்திலும் படுத்து தூங்கி உள்ளனர். நேற்று காலை 6 மணி அளவில் அறையில் தூங்கிய மனைவியை எழுப்புவதற்காக பிரவீன்குமார் சென்றபோது, புவனேஸ்வரி தூக்குப்போட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிரவீன்குமார் உடனே செய்யாறு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த புவனேஸ்வரியின் தாயார் விஜயா அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்தார். இந்நிலையில், இறந்த புவனேஸ்வரிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் சப்-கலெக்டர் ஆர்.அனாமிகா விசாரணை நடத்தி வருகிறார்.

You may also like

Leave a Comment

seventeen − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi