காரைக்குடி, ஜன.8: காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியின் 14ம் ஆண்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் உஷாகுமாரி வரவேற்றார். கலெக்டர் ஆஷாஅஜித் சிறப்புரையாற்றினார். பள்ளி குழும தலைவர் எஸ்பி.குமரேசன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அருண் முன்னிலை வகித்தார்.
தேசிய,மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு பேசுகையில், ‘‘குழந்தைகளிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த இதுபோன்ற ஆண்டு விழாக்கள் பெரிதும் உதவுகிறது. மாணவர்களை ஒருமித்த திறன் மிக்கவர்களாக உருவாக்க வேண்டும்.
எல்லோரிடமும் அறிவு உள்ளது. அந்த அறிவை வெளிக்கொண்டு வரக்கூடிய யுத்திகளை அறியாமல் பலர் உள்ளனர். நீங்கள் கற்ற கல்வி சமுதாய மேம்பாட்டிற்கு பயன்பட வேண்டும். கடின உழைப்பு, விடாமுயற்சி, தேடுதல் இருந்தால் அனைத்து குழந்தைகளும் மேதைகள் தான்’’ என்றார். நிகழ்ச்சியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி கல்வி குழு இயக்குநர்கள் சாந்திகுமரேசன், பிரித்திஅருண், டாக்டர் சோமசுந்தரம், டாக்டர் உஷாசோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி துணைமுதல்வர் பிரேமசித்ரா நன்றி கூறினார்.