சென்னை: திறந்த வெளிகளில் கழிவுநீர் வெளியேற்றுவதை தடுக்க திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விதிகளை மீறினால் 25 ஆயிரம் அபராதம் மற்றும் அந்த வாகனங்களுக்கு லைசென்ஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு நேற்று வௌியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள், சென்னை பெருநகரப்பகுதிகளில் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு தகுந்த திருத்தங்கள் 2022ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் ஆகியவற்றிற்கான சட்டங்களைத் திருத்தி, ஒழுங்குபடுத்துவதற்கான உரிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக புதிய விதிகளையும் உருவாக்கி கடந்த 1ம்தேதி முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது.இச்சட்டம் மற்றும் விதிகளின் படி, மலக்கசடு மற்றும் கழிவு நீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் இரண்டு ஆண்டுகள் செல்லத்தக்க வாகன உரிமம், விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2000 ஆகும். மேலும், உரிமம் பெற்றவர் தவிர வேறு எந்த நபரும் கட்டிடத்தில் இருந்து மலக்கசடு மற்றும் கழிவுகளை கொண்டு செல்வது மற்றும் அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்துவது இச்சட்ட விதிமுறைகளுக்கு முரணானதாகும். உரிமம் பெற்றவரின் வாகனம் பரிந்துரைக்கப்பட்டபடி, புவியிடம் காட்டும் அமைப்பு (ஜிபிஎஸ்) பொருத்த வேண்டும். உரிமம் பெற்ற வாகனங்கள் கசடுகளை அப்புறப்படுத்தும் வசதியினை ஒரு முறை பயன்படுத்துவதற்கு 6000 லிட்டர் வரைக்கும் 200 ரூபாயும் 6000 லிட்டருக்கு மேற்பட்ட இனங்களுக்கு 300 ரூபாயும் கட்டணமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் மற்றும் உரிமத்தில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி, விதிமீறல்கள் எதுவும் கண்டறிந்து உறுதி செய்யப்பட்டால், முதல் குற்றத்திற்கு 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். அதன்பின்பு, 2வது மற்றும் தொடர் குற்றங்களுக்கு 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். மேலும் தொடர் குற்றங்களைச் செய்தால் உரிமத்தை இடைநிறுத்தம் அல்லது ரத்து செய்வதுடன், குறிப்பிட்ட கருவி அல்லது உபகரணங்கள் உள்ளிட்ட எந்தவொரு வாகனத்தையும் அல்லது பிற பொருட்களையும் பறிமுதல் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக, பாதிக்கப்பட்டவர் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்….