திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக ஆண்டாள் கோயிலுக்குள் தண்ணீர் நுழைந்தது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நகரில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் சூறைக்காற்றுடன், கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் திருவில்லிபுத்தூர் மாவட்ட வனத்துறை அலுவலகம் அருகில், மீனாட்சிபுரம் விலக்கு, கீழரத வீதி தெற்கு ரத சந்திப்பில் மரங்கள் சாய்ந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. திருவில்லிபுத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.கனமழையால் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் நுழைவாயில் பந்தல் மண்டபத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் பக்தர்கள் சிரமமடைந்தனர். திருவில்லிபுத்தூர் தனியா நகர், ரயில்வே பீடர்ரோடு, அவுட்டர்புரம் உள்ளிட்ட 4 இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் நகரில் சுமார் 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் தீ: சிவகாசி அருகே மாரனேரி எம்.பாரைப்பட்டியில் நேற்று மாலை இடியுடன் கனமழை பெய்தது. அப்போது சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வைத்திருந்த குடோன் தீப்பிடித்து எரிந்தது. தொடர் மழையால் தீ தானாகவே அணைந்துவிட்டது. பணி முடிந்து தொழிலாளர்கள் சென்று விட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது….