திருமங்கலம், ஜூன் 11: வாகைகுளம் கிராமத்தில் அமைந்துள்ள துணை சுகாதார மையத்தினை மீண்டும் இயக்கவேண்டும் என திருமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. திருமங்கலம் ஊராட்சி ஒன்றியகுழு கூட்டம் தலைவர் லதாஜெகன் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. துணைத்தலைவர் வளர்மதி அன்பழகன், ஆணையாளர் சங்கர் கைலாசம், பொற்செல்வி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது வார்டு பிரச்னைகள் குறித்து பேசினர்.
அதிமுக கவுன்சிலர் மின்னல்கொடி ஆண்டிசாமி பேசுகையில், வாகைகுளம் கிராமத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த துணை சுகாதாரமையம் தற்போது செயல்படாமல் உள்ளது.இதனால் இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் செல்லம்பட்டி அல்லது திருமங்கலத்திற்கு செல்ல வேண்டியதாக உள்ளது. எனவே செயல்படாமல் இருக்கும் மையத்தினை உடனே இயக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
இதே போல் செக்கானூரணி ஆட்டுசந்தையை முழுமையாக மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் திமுகவை சேர்ந்த முத்துபாண்டி, பரமன், சோனியா, அதிமுக கவுன்சிலர்கள் செல்வம், மின்னல்கொடி, லட்சுமி, தேமுதிக கவுன்சிலர் தீபாஅழகர்சாமி சுயேட்சை கவுன்சிலர் சிவபாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.