திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றிய அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. திருப்போரூர் ஒன்றிய அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணிக்கு ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.ஆர்.எல். இதயவர்மன் தலைமை தாங்கினார். திருப்போரூர் பேரூராட்சி தலைவர் மு.தேவராஜ்வட்டார கல்வி அலுவலர் சிவசங்கரன் வரவேற்றார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் திருவருட்செல்வி, வட்டார கல்வி அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்போரூர் எம்எல்ஏ. எஸ்.எஸ்.பாலாஜி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் திருப்போரூர், கண்ணகப்பட்டு, காலவாக்கம், தண்டலம் ஆகிய பகுதிகளின் தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கிய முக்கிய வீதிகளின் வழியாக சென்று இள்ளலூர் சந்திப்பில் நிறைவடைந்தது. அப்போது, அரசுப்பள்ளியில் வழங்கப்படும் சலுகைகள், அரசுப்பள்ளியில் கல்வி போதிக்கும் முறை, உயர்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய பதாகைகள் எடுத்துச் செல்லப்பட்டன. மேலும், விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. முடிவில், இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்….