திருப்பூர், மே 3: திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காத 53 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.தேசிய விடுமுறை தினமான தொழிலாளர் தினத்தன்று அனைத்து தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். அவ்வாறு விடுமுறை அளிக்காதபட்சத்தில், பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு இரட்டை ஊதியம் அல்லது மாற்று விடுப்பு வழங்கப்பட வேண்டும். இதுகுறித்த விவரங்கள் மாவட்ட தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து, அதற்கான நகல்களை அனுப்பி வைக்க வேண்டும்.
இந்நிலையில் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) செந்தில்குமரன் தலைமையில், அதிகாரிகள் திருப்பூர், காங்கயம், தாராபுரம், உடுமலைப்ேபட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 73 கடை மற்றும் நிறுவனங்களில், தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் உணவு நிறுவனங்கள் சட்டம், விதிகளின் கீழ் ஆய்வு செய்தனர். இது குறித்து உதவி ஆணையர் செந்தில்குமரன் கூறியதாவது: இந்த சிறப்பு ஆய்வின் போது 35 கடைகள், நிறுவனங்களில் ஆய்வு செய்தபோது 23 முரண்பாடுகளும், 38 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்தபோது 30 முரண்பாடுகளும் என மொத்தம் 53 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.