விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த கூத்தாண்டவர் கோயில் விழாவில் ‘மிஸ் கூவாகம்’ அழகியாக சென்னையை சேர்ந்த நிரஞ்சனா தேர்வானார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம், கூத்தாண்டவர் கோயிலில், சித்திரை திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி தொடங்கியது. இதற்காக பல்வேறு நாடுகள், மாநிலங்களில் இருந்து திருநங்கைகள் குவிந்தனர். இவர்களுக்காக, தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை சார்பில் மிஸ் கூவாகம் அழகி போட்டி முதல் சுற்று உளுந்தூர்பேட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இறுதி சுற்று மழையால் பாதியில் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் அழகி போட்டி நடைபெற்றது.
முதல் சுற்றில் பங்கேற்ற 46 பேரிலிருந்து 16 பேர் இறுதிச் சுற்றுக்கு தேர்வு பெற்றனர். இவர்களின் நடை, உடை, பாவனையின் அடிப்படையிலும். பல்வேறு கேள்விகளுக்கு அளித்த சாதுர்யமான பதில்களின் அடிப்படையிலும் 2023க்கான மிஸ்கூவாகம் அழகியாக சென்னையைச் சேர்ந்த நிரஞ்சனா தேர்வு செய்யப்பட்டார். 2ம் இடத்தை சென்னை டிஷா, 3ம் இடத்தை சேலம் சாதனா ஆகியோர் தட்டிச் சென்றனர். இவர்களுக்கு திமுக மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்எல்ஏ, தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் தலைவர் மோகனாம்பாள், செயலர் கங்கா ஆகியோர் கிரீடம் சூட்டி, பட்டத்துக்கான பதாகையை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.