திருப்புத்தூர், ஆக.3: திருப்புத்தூர் பிரபாகர் காலனியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிச்சட்டி, பால்குடம் எடுத்தும் வழிபாடு செய்தனர். இந்த திருவிழா கடந்த செவ்வாய் கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்றிலிருந்து பிரபாகர் காலனி பகுதி மக்கள் விரதம் இருந்து, இரவு நேரங்களில் கும்மி கொட்டி வழிபாடு நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில் அண்ணா சிலை அருகே வல்லப விநாயகர் ஆலயத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்தும், அக்னிசட்டி ஏந்தியும், அலகு குத்தியும் முக்கிய வீதிகளின் வழியாக முத்து மாரியம்மன் கோயிலுக்கு வந்தனர். விழாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி சுமந்தும், கரும்பு தொட்டில் கட்டியும், அங்கபிரதட்சனை செய்தும் முத்துமாரி அம்மனை வழிபட்டனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்புத்தூர் மாரியம்மன் கோயிலில் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் வழிபாடு
previous post