சித்தூர் : திருப்பதி சேஷாசல வனப்பகுதியிலிருந்து காரில் செம்மரக்கட்டைகள் கடத்தியதாக வேலூரைச் சேர்ந்தவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சித்தூர் நகர டிஎஸ்பி சுதாகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:சித்தூர் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலையா, எஸ்ஐ சுமன் மற்றும் போலீசார் எர்ரேப்பள்ளி கிராமம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருப்பதியிலிருந்து சித்தூரை நோக்கி வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், காரை டிரைவர் நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார். இதனால், சந்தேகமடைந்த போலீசார் காரை பின்தொடர்ந்து வழிமறித்து தடுத்து நிறுத்தினர். உடனே, காரில் இருந்த 3 பேர் கத்தி, கோடாரி உள்ளிட்டவைகளால் போலீசாரை தாக்க முயன்றனர். போலீசார் சாமர்த்தியமாக செயல்பட்டு 3 பேரையும் பிடித்தனர். பின்னர், காரை சோதனை செய்ததில் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரிந்தது. ெதாடர்ந்து, 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.இதில், திருப்பதி ஓட்டேரியை சேர்ந்த ராஜேஷ்(27), வேலூர் தொரப்பாடி வாணியன்குளம் பகுதியை சேர்ந்த சுகுமார்(35), சின்னபாளம் பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஹேமகுமார்(28) என்பது தெரிந்தது. மேலும், இவர்களிடம் நடத்திய விசாரணையில், ‘திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரக்கட்டைகளை வெட்டி காரில் கடத்தியுள்ளனர். வேலூரை சேர்ந்த நந்தா என்கிற நந்தகுமாரிடம் செம்மரக்கட்டைகளை விற்பனை செய்வது தெரியவந்தது. வேலூரை சேர்ந்த நந்தா உட்பட வேறு யாராவது செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டு உள்ளார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பேரை கைது செய்து, அவர்கள் மீது செம்மரக்கட்டை கடத்திய வழக்கு மற்றும் போலீசாரை தாக்க முயன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார். …