திருப்புத்தூர்,டிச.21: திருப்புத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர், யோக பைரவர் கோயிலில் நேற்று வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் வழிபாடு நடந்தது. குன்றக்குடி தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று காலையில் பைரவர் சன்னதி முன்பு 11 கும்பங்கள் வைத்து சிறப்பு அஷ்ட பைரவர் யாகம் நடைபெற்றது. தொடர்ந்து பூர்ணாகுதியும் நடைபெற்றது.
பின்னர் மதியம் யோக பைரவருக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களாலும், யாகம் செய்யப்பட்ட புனிநீராலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. யோகபைரவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அஷ்டமி பூஜையை முன்னிட்டு திருப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்தும், தேங்காய், பூசணிக்காய், எலும்பிச்சம் பழம், மண் விளக்கு ஆகியவற்றில் தீபம் ஏற்றி தங்களது நேர்த்தி கடனை செலுத்தியும், வேண்டுதல் வைத்தும் வழிபாடு செய்தனர்.