திருச்சி, ஏப்.6: திருச்சியில் 2 கோயில்களின் பூட்டை உடைத்து நகையை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி காஜாமலை குடியிருப்பு வளாகத்தில் உள்ள சர்வ சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்த பூசாரி பிரகாஷ் கோயிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று காலை வந்து பார்த்த போது, கோயில் நுழைவாயில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த கே.கே நகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரனை நடத்தினர். அப்போது கோவிலுக்குள் இருந்த வெள்ளி குடம், வேல், தங்க மாங்கல்யம் மற்றும் உண்டியலில் இருந்த பணம் ஆகியவை திருடு போயிருந்தது. இதேபோன்று திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலையில் டி.வி.எஸ் நகர் பகுதியில் உள்ள மகா விஷ்ணு கோயிலில் மர்ம ஆசாமிகள் சிலர் கோயிலின் கிரில் கதவை உடைத்து உள்ளே நுழைந்து தங்க தாலி குண்டு, மாங்கல்யம், மற்றும் வளையல் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.
இதுகுறித்து கே.கே நகர் குற்றப்பிரிவு போலீசார் இரண்டு இடத்திற்கும் சென்று திருட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கே.கே நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.