Saturday, May 4, 2024
Home » திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கம் பகீர் குற்றச்சாட்டுவாடகை வசூலிக்கவும், செலுத்தவும் முடியாமல் திணறல்

திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கம் பகீர் குற்றச்சாட்டு
வாடகை வசூலிக்கவும், செலுத்தவும் முடியாமல் திணறல்

by Karthik Yash
Published: Last Updated on

நெல்லை, ஏப். 5: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கட்டிடம், நிலங்களுக்கு அதிமுக ஆட்சியில் வாடகை நிர்ணயம் செய்ததில் குளறுபடி உள்ளதால், வாடகை வசூலிக்கவும் செலுத்தவும் முடியாமல் திணறும் நிலை உள்ளது என குற்றம் சாட்டியுள்ள திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கம், திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் நிர்வாகிகள், கோயில் சொத்துக்களுக்கு நியாய வாடகை நிர்ணயம் செய்ததில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டி தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சரிடம் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் தமிழ்நாடு திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர் யூனியன் மாநில பொதுச் செயலாளர் முத்துசாமி இணைந்து அளித்த மனு: கடந்த 2006 கலைஞர் ஆட்சி காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கட்டிடம் மற்றும் மனை குடியிருப்பு 0.10%, மனை வணிகம் 0.30%, கட்டிட வணிகம் 0.60% என வாடகை நிர்ணயம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது. இந்த வாடகை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 சதவீதம் உயர்த்தி வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டது. இதன் மூலம் வாடகைதாரர்களிடம் நியாயமான முறையில் வாடகை நிர்ணயிக்கப்பட்டது. அதன்படியே 2016 ஜூன் 30 வரை நியாய வாடகை பெறப்பட்டு வந்தது.

ஆனால் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பொழுது 2016 ஜூலை 1 முதல், கடந்த அரசாணைகளுக்கு உட்படாத வகையில் சந்தை மதிப்பின் அடிப்படையில் புதிதாக வாடகை நிர்ணயம் செய்ய அப்போதைய ஆணையர் உத்தரவிட்டார். இதனால் நூறு சதவீதம் முதல் ஆயிரம் சதவீதம் வரை கற்பனைக்கு எட்டாத வகையில் வாடகை உயர்த்தப்பட்டது. பிறகு பத்திரப்பதிவுத்துறை வழிகாட்டி மதிப்பை குறைத்தபோதும் உயர்த்தப்பட்ட வாடகை மாற்றி நிர்ணயம் செய்யப்படவில்லை.
கோயில் மனை மற்றும் கட்டிடத்தின் வாடகைதாரர்கள் உயர்த்தப்பட்ட வாடகையை கட்ட முடியாமல் திணறி வருகின்றனர். கடந்த 2016 ஜூலை 1க்கு பிறகு நிர்ணயிக்கப்பட்ட வாடகையே வசூலிக்கப்பட முடியாமல் கோயில் அதிகாரிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக கோயில் மனையில் குடியிருப்போர் சங்கம் பல்வேறு கட்டங்களாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தலைமைச் செயலாளர் தலைமையில் வாடகை நிர்ணயக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவால் இன்றளவும் வாடகையை நிர்ணயம் செய்ய முடியாமல் உள்ளது. இதனால் சந்தை மதிப்பு அடிப்படையில் வாடகை வசூலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கம் மற்றும் தொழிலாளர் யூனியன் சார்பில் கலைஞர் ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட அரசாணையின்படியே வாடகை வசூல் செய்ய வழிவகை செய்ய வேண்டும் அல்லது புதிதாக திருத்தப்பட்ட வாடகை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து அரசாணை வெளியிட வேண்டும்.

வாடகைதாரர்கள் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் வாடகை நிலுவை தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த வழக்குகளில் சமரசம் செய்யும் பட்சத்தில் வழக்குகளுக்கு உண்டாகும் செலவாவது குறையும். இந்த சூழலில் 2019 மற்றும் 2022ம் ஆண்டுக்கான மறு வாடகை நிர்ணயம் செய்ய கோயில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கோயில் நிர்வாகம் வாடகை நிர்ணயத்தில் கடுமையான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி நியாய வாடகை நிர்ணய குழு அமைத்து பரிசீலிக்கும்போது சங்க நிர்வாகிகளின் பிரதிநிதிகளை அதில் இடம்பெறச் செய்து அவர்களின் கருத்தையும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

13 − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi