திண்டுக்கல், ஜன. 29: திண்டுக்கல் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று விடுமுறை மற்றும் சம்பளத்துடன் கூடிய மாற்று விடுப்பு அளிக்காத 61 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தொழிலாளர் உதவி ஆணையர் சிவசிந்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அல்லது சம்பளத்துடன் கூடிய மாற்று விடுப்பு வழங்கப்பட்டதா என பழநி, நிலக்கோட்டை, கொடைக்கானல், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்கள், உணவகங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடைகள், உணவகங்கள் என 74 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 61 நிறுவனங்களில் முரண்பாடு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 61 நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று அரசு பொது விடுமுறை நாட்களில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் செயல்படும் நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குடியரசு தினத்தையொட்டி பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். அரசு ஒப்பந்த பணிகள், இதர பணிகளில் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என்ற தீர்மானம் கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது என்றார்.