சேந்தமங்கலம்: புதுச்சத்திரம் அருகே, எள் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுச்சத்திரம் வட்டார பகுதியான நவணி, இடையப்பட்டி, ஓலப்பாளையம், அகரம், சேவாகவுண்டம்பாளையம், லக்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் கடந்த கார்த்திகை மாதம் எள் பயிரிட்டுள்ளனர். தற்போது நல்ல விளைச்சல் கண்டு, அறுவடைக்கு தயாராக உள்ளது. புதுச்சத்திரம் வட்டார பகுதியில், 125 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் என் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நல்ல விளைச்சல் கிடைத்துள்ளதால், விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கார்த்திகை மாதத்தில் எள் விதைப்பு பணியில் ஈடுபடுவோம். இந்தாண்டு போதிய மழை இல்லாததால், எள் விதைப்பு பரப்பு குறைந்துள்ளது. இருந்த போதிலும் செடியில் காய்கள் அதிக அளவில் பிடித்திருப்பதால், அதிகளவில் மகசூல் கிடைக்கும் என நம்புகிறோம். தற்போது ஒரு கிலோ எள் ₹80க்கு விற்கப்பட்டு வருகிறது. இன்னும் விலை உயரும் என எதிர்பார்க்கிறோம்,’ என்றனர்.