திண்டிவனம், ஜூலை 14: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தாதாபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(56). அதிமுக ஒன்றிய செயலாளர். இவர் நேற்று முன்தினம் இரவு, தனது மனைவியுடன் முன்பக்க அறையில் படுத்து தூங்கியுள்ளார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்குள்ள அறையில் பீரோவை உடைத்து 30 பவுன், 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. அதே பகுதியில் மேட்டுத் தெருவில் வசிக்கும் முத்து(48) என்பவர், தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வருகிறார். அவரது தாய் தானம்மாள்(80) மட்டும் அங்கு வசித்து வந்தார். இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, பீரோவில் இருந்த 15 பவுன், 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடியுள்ளனர்.
அதே பகுதியில் உள்ள பெருமாள் கோயில் தெருவில் வசிக்கும் சுரேஷ்குமார்(41) என்பவர், தனது மனைவியுடன் வீட்டின் அறைக்குள் தூங்கியுள்ளார். அவரது வீட்டின் பூட்டை உடைத்து 6 பட்டுப்புடவை, ஒரு வெண்கல சொம்பையும், அக்ரஹார தெருவில் லட்சுமணன்(45) என்பவர் வீட்டில் 2 பவுன் என அடுத்தடுத்து நான்கு வீடுகளில் கொள்ளை போனது. கொள்ளைப்போன நகையின் மதிப்பு ரூ.20 லட்சமாகும். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். தகவலறிந்த திண்டிவனம் டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். நள்ளிரவில் பலத்த மழை பெய்ததால், மின்சாரம் தடைபட்டதும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.