திருக்கனூர், ஜூலை 14: திருக்கனூர் அருகே சோரப்பட்டு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட விநாயகம்பட்டு கிராம மக்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை உடனே பணி வழங்கக்கோரி புதுச்சேரி- திருக்கனூர் மெயின் ரோட்டில் விநாயகம்பட்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சிவசங்கரி, துணை தலைவர் அன்புமணி, செயலாளர் தமிழ்ச்செல்வன் தட்சிணாமூர்த்தி, உமாசங்கரி, விநாயகம், ரமேஷ், சங்கர், முத்து உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுபற்றி தகவலறிந்த திருக்கனூர் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது, கிராம பஞ்சாயத்தில் இருந்த ஜிஆர்எஸ் இறந்து விட்டதால் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரத்தில் பணி வழங்கப்படும் எனவும் அதிகாரி கூறியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.