தா.பழூர் : அரியலூர் மாவட்டம் தா. பழூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின் பகுதியில் உள்ளது அண்ணா நினைவு சமுதாய கூடம். இந்த சமுதாயக் கூடம் 2004ம் ஆண்டு ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரையால் கட்டப்பட்டது. இந்த சமுதாயக் கூடத்தில் பல்வேறு தரப்பட்ட அரசு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் இதில் இந்த நிகழ்விலும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் பொதுமக்கள் பயன்பாடு இல்லாமல் கிடந்த இந்த சமுதாயகூட வளாகம் சுற்றிலும் முட்புதர்கள் மண்டி தற்போது கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு செய்து விஷஜந்துக்கள் வாழும் கூடாரமாக மாறி வருகிறது. பயன்பாடு இல்லாத காரணத்தினால் இந்த சமுதாய கூடத்துக்கு வரும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மின் விளக்குகள் அனைத்தும் பழுதாகி உள்ளது. இந்த வளாகத்தை சுற்றிலும் கருவேல மரங்கள் சூழ்ந்து இருப்பதால் கட்டிடம் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கருவேல முட்புதர்களால் பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர்.மேலும் தா.பழூர் ஒன்றியத்தில் ஒன்றிய அலுவலகம், மருத்துவமனை, கால்நட மருத்துவமனை உள்ளிட்ட அரசு அலுவலகம் மற்றும் அரசு சார்பில் நடைபெறும் கூட்டங்கள், சமூக வளைகாப்பு, மற்றும் மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்கு இடம் இல்லாத காரணத்தினால் தனியார் மண்டபங்களில் வாடகைக்கு செல்ல வேண்டியுள்ளது. இது போன்ற ஒரு பெரிய அளவிலான சமுதாய கட்டிடம் உள்ள நிலையில் இதனை சீர் செய்து பராமரிக்காத காரணத்தினால் வாடகைக்கு இடம் தேடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.மேலும் இந்த சமுதாய கூடத்தை சரி செய்வதன் மூலம் தா.பழூர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை பெரிய அளவிலான மண்டபங்களை நடத்த முடியாத நிலையில் இது போன்ற சமுதாய கூடங்களில் தங்களால் முடிந்த தொகையை கொடுத்து நிகழ்ச்சிகளை நடத்தி செல்லலாம். இதுபோன்று வரும் வாடகையை தொகையில் அந்த சமுதாய கூட்டத்திற்கான தேவையானவற்றை செய்து கொள்ள இயலும். அனைத்து தரப்பினரும் பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ள சமுதாய கூடத்தை சரிசெய்யாமல் பயன்பாடின்றி கிடைக்கின்றது.ஆகையால் மாவட்ட நிர்வாகம் பயன்பாடின்றி கருவேல முள்மரங்கள் முளைத்து உள்ள சமுதாய கூடத்தை சரிசெய்து அரசு நிகழ்ச்சிகளுக்கும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….
தா.பழூரில் கருவேல மரங்கள் சூழ்ந்த சமுதாயக்கூடம்-சீரமைத்து பயன்பாட்டுக்கு வருமா? மக்கள் எதிர்பார்ப்பு
previous post