ஊட்டி, ஏப். 16: சுற்றுலா பயணிகள் வசதிக்காக தாவரவியல் பூங்கா – படகு இல்லம் இடையே பார்க் அண்ட் ரெய்டு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவது வழக்கம். இது போன்ற சமயங்களில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும். கடந்த சில ஆண்டுகளாக, சுற்றுலா பயணிகள் குறைந்த கட்டணத்தில் பயணித்து அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிக்கும் வகையில் போக்குவரத்து கழகத்தின் சார்பில் சர்க்கீயூட் பஸ் சேவை துவக்கப்படும்.
இதன் மூலம் சுற்றுலா பயணிகள் குறைந்த கட்டணத்தில் அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்து செல்வது வாடிக்கை. அதேபோல், பூங்கா மற்றும் படகு இல்லம் இடையே பார்க் அண்ட் ரெய்டு பஸ்கள் இயக்கப்படும். இந்நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், நேற்று முன்தினம் முதல் சர்க்கீயூட் பஸ் சேவையை போக்குவரத்து கழகம் துவக்கியது. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருகின்றனர். இந்நிலையில், தாவரவியல் பூங்காவில் இருந்து படகு இல்லத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்லும் வகையில் தற்போது பார்க் அண்ட் ரெய்டு பஸ்களும் இயக்கப்படுகிறது. இது சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.