சத்தியமங்கலம், அக்.6: தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கடத்திச் சென்று அருகாமையில் உள்ள கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடர் கதையாக உள்ளது. இதனை தடுக்க தாளவாடி வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு தாளவாடி வருவாய் துறை அதிகாரிகள் தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் உள்ள ராமாபுரம் என்ற இடத்தில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியே வந்த மொபட் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளில் 100 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும், அரிசியை கடத்தி வந்தவர் தாளவாடியைச் சேர்ந்த பாட்ஷா பாய் (55) என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தாளவாடி வருவாய் துறையினர் ரேஷன் அரிசி மற்றும் மொபட் வாகனத்தை பறிமுதல் செய்ததோடு பாட்ஷா பாயை பிடித்து ஈரோடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.