தேனி : தேனியில் தார்ச்சாலை பணி நடப்பதாக அறிவிப்பதற்காக, மரக்கிளைகளை வெட்டிப் போடுவது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தேனியில் புதிய பஸ்நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட விளையாட்டு மைதானம், வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கு செல்ல திட்டச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சிதிலமடைந்திருந்த இச்சாலையை புதிதாக அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக சிலர் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார், ஆட்டோக்களில் பயணித்தனர். இதற்காக வேறு சாலை வழியாக செல்லவும் என அறிவிக்க வேண்டும். ஆனால், பொதுமக்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காக விளம்பர பலகை வைப்பதற்கு பதில் ஒப்பந்ததாரர் இச்சாலையின் ஓரத்தில் நிழல் தரும் புங்கன், வேம்பு மரங்களின் கிளைகளை வெட்டி பணி நடக்கும் சாலையில் போட்டுள்ளார். கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில், இச்சாலையில் செல்வோர் மரங்களின் நிழல்களில் இளைப்பாறி விட்டு செல்வதை வாடிக்கையாக்கி வரும் நிலையில், தார்ச்சாலை அமைப்பதை அறிவிக்கும் எச்சரிக்கை பலகைக்கு பதிலாக மரக்கிளைகளை வெட்டிப் போட்டது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது….